Showing posts with label தலையங்கம். Show all posts
Showing posts with label தலையங்கம். Show all posts

Friday, June 16, 2006

தை இரண்டாம் இதழ்

இதழாகத்தான் தொடங்கினோம்
இயக்கமாகி விட்டது.

முதல் பதிப்பு போதாமல் இரண்டாம் பதிப்பு கண்டிருக்கிறது...
ஓர் இலக்கிய இதழ். தமிழில்... தமிழ்நாட்டில்...

கைநாட்டு மரபிலிருந்து... கையெழுத்து மரபிற்குக்
கரையேற்றிய அந்த ஈரோட்டுக் கிழவரின் எதிர்நீச்சல்
வெற்றியாகத்தான் இதனை உணர்கிறோம்.

கறுநீர் மடுவில் களிப்போடு மீன்களோடு மீன்களாய்
நீச்சலடித்துக் கொண்டிருந்தவரை
அற்ப சூழ்ச்சியில் போய் அமுக்கி
ஆழத்திலேயே கொல்லப் பார்த்தவரின்
கொடும்பிடியிலிருந்துத் திமிறி உதறி உந்தி
மேல்வந்து வானம் வாங்கி
மூச்சுவிடுகிற வேகத்தில் வெளிப்படுகிறது
இன்றைய தமிழர்களின் தமிழ்க் கவிதை.

என்ன எழுதியிருக்கிறாள், என்ன எழுதியிருக்கிறான்
என்பது தெரியாத எம் ஏடறியா எழுத்தறியா பாமரத் தாய்கள்
இந்தத் தை இதழை ஏந்திப்போய்
எதிர்வீட்டுக்காரர்களிடமெல்லாம்
காட்டிக்காட்டி
என் மகள் எழுதியதைப் பாருங்கள்
என் மகன் எழுதியதைப்பாருங்கள் என்று
ஏக்கம் தீர்க்கிறார்கள் என்கிற செய்தியையே
வியர்வைத் திங்களின்
வெற்றியாகப் பதிவு செய்கிறோம்.

அங்கங்கே அழைத்தழைத்து அறிமுக விழா நடத்தி
அம்மாவின் முந்தானை அவிழ்ப்பாய்
ஆதரவு தருகிற அனைத்து
அன்புள்ளங்களுக்கும்
உறுதிதருகிறோம்
கவிதைகளுக்கான இந்த இதழை
தொடர்ந்து கொண்டுவருவோம்...