Tuesday, February 28, 2006

மேத்தா கவிதைகள்

நினைவு நாள்

செத்துப்போனவர்கள்
அஞ்சலி செலுத்துகிறார்கள்
எப்போதும் உயிரோடு
இருப்பவர்களுக்கு
*

வழுவமைதி

வசதி உள்ளவர்கள்
வழுக்கி விழுந்தால்
குளியல் அறை என்று
கூறுக

பஞ்சை பராரிகள்
வழுக்கி விழுந்தால்
படுக்கை அறை என்று
பகர்க

மதிப்பீடு

எழுதிக் கொண்டிருந்தான்
விமர்சனங்கள் வந்தன
எழுதாமல் இருந்தான்
விருதுகள் வந்தன

கால்நடைக்கு தெரியுமா
கவிதை நடை?

ஒற்றைக் காலால்
ஒங்கி மிதிக்கிறார்கள்
இரண்டு கால்களில்
விழுந்து எழுந்தவர்கள்
*

சிறுகுறிப்பு வரைக

அமெரிக்கா

தலையில் எண்ணெய்
தடவுவார்கள் உலகில்

அமெரிக்காவோ
எண்ணெய்க்காகவே
வளைகுடா நாடுகளில்
தலையைத் தடவுகிறது.


ஈராக்

ஈராக் அழிந்து
சிதைந்த பிறகுதான்
தெரிந்தது
பேரழிவு ஆயுதங்கள்
எவர் கையில்
இருந்ததென்பது?
*

மனக்கதவு

யார் தட்டிய போதும்
திறந்ததே இல்லை

இப்போது
ஒவ்வொரு கதவையும்
ஓங்கி ஓங்கி தட்டி
ஓய்ந்தபோது
தெரிகிறது

தட்டும் கையின் வலியும்
திறக்காத கையின் திமிரும்
*

கொம்பு முளைத்துவிடுகிறது
மாடுகளைப்போல்
தலையாட்டும்
மனிதர்களுக்கும்!