ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Saturday, December 20, 2008

என் தேசம்.

என் தேசம்.
****************
நலிவுற்றுக் கிடக்கிறது என் நாடு.
மெலிந்து கிடக்கிறது என் தேசம்.
பாதைகளின் வழியடைப்பால்
குருதிக் கிடங்குகளுக்குள்ளும்
குண்டுக் குளங்களுக்குள்ளும்
நீந்தியபடியே எங்கள் பிரயாணங்கள்.
வடகிழக்குத் திசைகாட்டியிலோ"சுடுகாடு இங்கே".
சுத்தம் செய்யும் புத்தன்கூட அசுத்தமாய்.
போதி மரத்துக்குக் கீழும் அழுகுரல் கேட்கிறதாம்.
சித்தார்த்தனும் சந்தேகத்தோடு!!!
ஹேமா(சுவிஸ்)

என்னால் இயன்றது

என்னால் இயன்றது
நிச்சயமாக சொல்லமுடியும்
தொடரும் செல்(cell) லடி சப்தம்
தாளாது அழும் கைக்குழந்தைக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
எந்த நாடும்
எந்த இயக்கமும்
முக்கியமாக
எந்த மொழியும்


எம் இறையாண்மையை
பாதுகாக்கும் பொருட்டு
என்னால் இயன்றது
இனி இந்த
உறக்கமற்ற இரவில்
பரத்தையின் முலையை
நகங்களால
காயப்படுத்த மட்டுமே



--இலக்குவண

புலம்பெயர்வின் வலி

புலம்பெயர்வின் வலி
கடல் படிந்த முகத்தோடு
கண்கள் தேடிய முகாமினுள்
கூட்டங்கள் நுழையக் காண்கிறோம்

கைகளை இழந்தோ
கால்களை இழந்தோ
தத்தியோ
தாவியோ
வேண்டா வெறுப்புடனோ
எப்படியோ
சேர்கின்றனர்
மந்தையடைப்பாய்
விந்திய நாடு
ஏற்பதைக் காண்கிறோம்

வத்திய முலையோடு
கைம்பெண்கள்
அதை உறிஞ்சிக் கொண்டிருக்கும்
கண் திறக்கா சிசுக்கள்

சீழ்வடியும் புண்களோடு
இளைஞர்கள்
இன்றோ நாளையோ
கண்மூடக் காத்திருக்கும்
முதியவர்கள்

அனைவரையும்
அலட்சியமாய்
அன்பில்லாதமனமாய்
கைதிகளாய்
அடைத்து

முகாமை பூட்டிச் செல்லுகையில்
ஒரு குரல் மட்டும்
கிசுகிசுக்கிறது

" நம்மட நாட்டிலே செத்துப் போயிருக்கலாம் "

-ஆதவா

ஈழக்கவிதைகள்: "தை" இதழுக்காக

ஈழக்கவிதைகள்: "தை" இதழுக்காக

1. மிதந்து வந்த
சிறுமியின் ஆடை
கண்டு
பெருமூச்சு வாங்கியது
தமிழகம்.
நல்லவேளை உடல்
வரவில்லை என்று.



2.அகதி முகாமின்
கூரை வழியே
அழகாய்
தெரியும் நிலா.




3.தோட்டாக்களுக்கு
நெஞ்சு நிமிர்த்திய
அப்பா
கதறி அழுகிறார்
"அகதி" எனும் சொல்
கேட்டு.


4.உணவுப்பொட்டலங்கள்
வீசிச் செல்லும்
விமானம் கண்டு ஓடி
ஒளிகின்றன எங்கள்
பிள்ளைகள்.
குண்டுகள் வீசும் விமானங்கள்
பார்த்து பழகிய கண்களாயிற்றே!


5.புலம்பெயர்ந்தவனின் விதி

காற்றில் அடித்த
சன்னல்க்கதவுகளின் பேரோசையில்
திடுக்கிட்டு விழித்தழுகிறது
தொட்டில்குழந்தை...

அடைமழை நாட்களில்
தூரத்து இடியோசைகேட்டு
நாற்காலியின் அடியில்
ஓடி ஒளிகின்றாள்
நான்குவயது மகள்...

கதவு தட்டப்படும்
போதெல்லாம்
நடுங்க ஆரம்பிக்கிறது
பாட்டியின் தேகம்..

ஆயிரம் மைல்களுக்கு
அப்பால் புலம்பெயர்ந்த
பின்னும்
தொடர்ந்துகொண்டே இருக்கிறது
ஈழத்தின் அதிர்வலைகள்.

-நிலாரசிகன்.

Sunday, December 07, 2008

"தை" ஈழ வலியில் என்னையும் அழுத்திக்கொண்டதில் பீறீட்டவை இவை

"தை" ஈழ வலியில் என்னையும் அழுத்திக்கொண்டதில் பீறீட்டவை இவை

அன்புடன்
கவிமதி / துபாய்
------------------------------------------------------------------
முள்குத்தியது
வலிக்கவில்லை
கட்டை கால்


பகுதி தேர்வு
எழுதிகொண்டிருக்கையில்
பள்ளிக்கூடம்
இடம்பெயர்ந்தது
பதுங்குகுழிக்கு

கனவுகளை ஊண்ட
நிலம் கேட்டோம்
தூக்கத்தை களைத்தீர்கள்

வானவில் வரைய
வண்ணம் கேட்டோம்
தூரிகையை முரித்தீர்கள்

சுவர்கோழிகளின்
பாடல் கேட்டோம்
காதுகளை அறுத்தீர்கள்

கேட்டதையெல்லாம்
தராத நீங்கள்
கேட்காமல் ஏன் தந்தீர்கள்

அகதிமுகாம்களை

காடு

காடு

இசையில் நனைந்து இணைந்தாய்
இதயம் கிளர்ந்து எழுந்தாய்
இருப்பை உணர்த்த நிமிர்ந்தாய்
இருட்டில் ஒளியாய் அலைந்தாய்

வீரம் உனக்குள் செரிந்தாய்
வீரியம் எமக்குச் சொரிந்தாய்
வீதியை அமைத்து நடந்தாய்
வீடே உமக்கு காடாய்


கார்மேக் கூட்டம் கண்டு
மயில் வந்து நடனம் ஆடும்
மயில் நடனக்காட்சி கண்டு
குயில் வெற்றிப்பாடல் பாடும்

நரிகளெல்லாம் தந்திரம் தோற்று
நால்திசையும் ஓடி ஒழியும்
சீரிவரும் சிறுத்தைக்கூட்டம்
சீற்றமுடன் கைகள் குலுக்க - அங்கே

புலி வரும் புலி வரும்
வெற்றிப்புன்னகை பூத்த முகமாய்

தமிழீழம் ஒருநாள் வெல்லும்
எமது இருப்பை அதுவே சொல்லும்.

----சே.ரெ.பட்டணம் மணி

சபிக்கப்பட்ட பரம்பரை…..

சபிக்கப்பட்ட பரம்பரை…..

தன் வாழ்நாளின் சந்தோச தரணங்களை
சிலிர்ப்போடு அசைபோடுவார் அப்பப்பா – அது
அவராயுளின் அரைப்பகுதி

பாடசாலைக் காலம்வரை
பட்டாம்பூச்சி வாழ்க்கையென்று
மகிழ்வார் அப்பா

தவழ்ந்தது முதல் வேட்டோசை கேட்டு
வளர்ந்தேன் நான்

தம்பி வயிற்றில் இருக்கையில்
'செல்' லடிக்கு மத்தியில்
இடம்பெயர்ந்தாள் அன்னை

நாளை என் பிள்ளையின் நாட்குறிப்பினை
யுத்தத்தின் கரங்கள் எழுதும்
இரத்த மை கொண்டு……….



தங்கராசா-ஜீவராஜ்
திருகோணமலை, இலங்கை

Thursday, December 04, 2008

புலம் பெயர்ந்த வாழ்வுபற்றி...!

புலம் பெயர்ந்த வாழ்வுபற்றி...!
* செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


வேறு எதற்காக
இல்லையென்றாலும்

இடம் மாறி
இடம் மாறி
இப்போது
நீ இருக்கும்
இடத்தை
யாவருக்கும்
அறிவிக்கவாவது

ஏதாவதொரு
இணைய தளத்தில்
எழுதேன் உன் கவிதையை
புனைப்பெயர் எதுவுமின்றி.
புலம் பெயர்ந்த உன் வாழ்வுபற்றி.
o

கொத்தணிக் குண்டுகள்

கொத்தணிக் குண்டுகள்
-Cluster bombs

உலகம் எங்கும்
தடைசெய்யபட்ட எமக்கு
29.11.2008
இன்று விடுதலைநாள்!

பறந்து பறந்து வெடிக்கும்
எமக்கு பிடித்த நகரம்
தமிழீழத்தில் கிளிநொச்சி!

எம்மைக் கட்டுப்படுத்த
முடியாது.
எம்மைக் கொச்சைப்படுத்த
முடியாது.

சோவியத் சிறைகளில்
அடைபட்டுக் கிடந்தோம்
சிறிலங்கா வந்து மீட்டெடுத்து
தமிழர்களின் தலைவாசலில்
கட்டிவைத்து விளையாடுகிறது.

ஈழத் தமிழருக்காக
உலகத் தமிழர்கள் மட்டுமில்லை
நாங்களும்தான்
கொத்துக் கொத்தாய்
கண்ணீர் வடிக்கிறோம்!

நாம் என்ன செய்வது?
எம்மை உருவாக்கியவனும்
பயங்கரமானவன்
நாமோ அவனைவிடப்
பயங்கரமானவர்கள்

எம்மை இலகுவில்
அழித்துவிட முடியாது
ஒருமுறையல்ல
இருமுறையல்ல
மூன்று முறைக்குமேல்
இடைவிட்டு வெடிப்போம்
பேரழிவு உண்டாகும்

இரும்புப் பெட்டிகளில்
அடைத்து எம்மை
எங்கும் வீசினாலும்
இறுதியில்
கல்லறைப் பெட்டிகளில்
மனிதர்களை அடைப்போம்!

மனிதர்கள் மிருகங்கள்
என்று பாகுபாடு பார்த்து
வெடிக்கத் தெரியாது எமக்கு
ஏவுகிறவர்களுக்கு எதிரே
வெடிக்கவும் தெரியும்
எதிராக வெடிக்கவும் தெரியும்

கல்லாறு நாதன் குடியிருப்பும்
ராணி மைந்தன் குடியிருப்பும்
எமக்கு ஒன்றுதான்!
எம்மை வீசியவர்கள் மீது
சாபமிடுங்கள்!
எம்மீது சாபமிடாதீர்கள்!

அணுகுண்டுகள்
எமக்கு
அண்ணாக்களாக இருந்தாலும்
ஈழத்தமிழர் மீதான
இனஅழிப்புப் போரில்
நாங்கள் வெறும் அம்புகள்

ஏவியவர்களின் கைகளை
உடைத்து வந்து
எங்கள் காலடியில் போடுங்கள்
உருவாக்கியவர்களின் விழிகளை
திறந்து எங்களை
கூண்டோடு அழியுங்கள்!

எம் பிறப்பே
எமக்குப் பிடிக்காத போது
ஒன்றுதிரண்ட உலகநாடுகள்
அயர்லாந்திலும்
நோர்வேயிலும்
உடன்படிக்கை போடுவது
உங்களுக்கு மட்டுமல்ல
எங்களுக்கும் மகிழ்ச்சியே!

வசீகரன்
-நோர்வே

என் கண்ணீர்

ஈழமக்களை பற்றி
எழுதி முடித்த பிறகு
பிழைதிருத்த வந்தது
என் கண்ணீர்

கண்ணீரால் திருத்த
முடியாத கட்டுரைகள்
உண்டு.

எதிரிகளின் பிழைதிருத்த
எம் ஈழமக்களின்
இன்னல்திருத்த
வெகுண்டெழுங்கள் எம்
தமிழினமே!


-சுகைபு
மும்பை

தளர்வில்லை..

அம்மாவின் விரல் பிடித்து
நடை பயின்ற
செம்மண் வீதிகளை
கூகுல் வழியே ரசித்து பார்க்கிறோம்

கடந்து வந்த பாதைகளில்
ரணங்களை விதைத்துவிட்டு
தூரத்து விடியலுக்காய்
செல்லாக் காசாய் நாம்

ரத்தம் வடிந்த இடத்தில்
மொய்க்கும் ஈக்களுக்கு கூட
திகட்டி இருக்கும்
ஆராஜகமே உனக்கேன்
ரத்தவெறி அடங்கவில்லை

கண்ணில் நீரும் இல்லை
நெஞ்சில் பயமும் இல்லை
நாளை விடியல் என
சொல்லும் எமக்கு
என்றுமே தளர்வும் இல்லை..

@
தேனுசா ஈசுவரன்

ஈழம்

1.
விடியற்க்காலைகள் விடிகின்றன.
உங்களிடத்தில் பனித்துளியுடனும்
எங்களிடத்தில் கண்ணீர்த்துளியுடனும்.

----- * *-----

2.
பிறந்தமண்
இருப்பிடம்
உடமைகள் அனைத்தையும்
தீக்கக்கும் இராணுவ வாகணங்களுக்கும்
விமானக்குண்டுகளுக்கும் இறையாக்கிவிட்டு
இறைந்த பருக்கையாய் மீய்ந்த வாழ்க்கையோடு
நூலறுந்தப் பட்டம் போல் திசையற்று அலையும்
எம்மக்களின் நிலை பார்த்து கண்மூட்க்கொண்ட
உலகமே….. நீ சொல்லாதே
தீவிரவாதம் எதுவென்று!

----- * *-----

ஆ.முத்துராமலிங்கம்.
சாலிகிராமம்.

வன்கொடுமையில் வாழும் மனது...

வன்கொடுமையில் வாழும் மனது...
# செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

பூமலரும் பொழுதுகளில்
புல்லாங்குழல் இன்னிசையில்
பனித்துளியின் புதுப்பொலிவில்
பேரின்பப் பெருவெளியில்
வெண்ணிலவின் தண்ணொளியில்
பெண்ணவளின் கண்ணசைவில்
கொடியிடையின் நடையழகில்
இடைதாண்டும் ஜடையழகில்
மின்மினியின் கண்சிமிட்டலில்

வந்து விழும் வரிகள் அறியா(து)
வன்கொடுமையில் வாழும் மனது.

o

பிணி.

பிணி.

பின்னிரவு மழையைப்போல்
நீண்டு வழிகின்றது எம்மக்களின்
கண்ணீரும், குருதியும்.

பழைய புகைப்படத்தைப்போல்
மங்கிய நிலையில் விழுந்து உடைகின்றது
அவர்களின் வாழ்க்கை.

ஓ… இறைவா
உலகிற்க்கெல்லாம் சூரியக்கரையில்
விடியலை வைத்த நீ
அகதிகளாய் விரட்டப்படும்
எம்தாய் மக்களின் விடியலை ஏன்
சூனியக்கரங்களில் சிக்கவைத்தாய்?

-
ஆ.முத்துராமலிங்கம்
சாலிகிராமம்.

எங்கள் வாழ்க்கையின் முரண்பாடுகள்

எங்கள் வாழ்க்கையின் முரண்பாடுகள்

வியர்க்கும் எமக்கு விசிறி விடுகிறது
படுக்கையிலே விழும்
ஏவுகணை….
பல்லாங்குளியாட சன்னங்களும்
ஓழித்து
உயிர் பிழைத்து விளையாடிட
குண்டு வெடிப்புப் பள்ளங்களுமாக கழியும் பொழுதுகள் …!
ஓவ்வொன்றையும் எழுதி முடிக்கையிலே
கடைசிக் கவிதை இதுவா என
வந்து விசாரிக்கிறது சிப்பாய்களின் பாதணி ஓசை …!

மட்டுவில் ஞானக்குமாரன் (இலங்கை)

Wednesday, December 03, 2008

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

கவிதை உறவுகளே..
வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.

கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை
10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி
தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

thaiithaz@gmail.com


குருதிக் கசியும் மொழியில்
நாடிழந்த புலம்பெயர் வாழ்வை
ஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.
சிறந்த கவிதைகள் தை இதழிலும்
பாராட்டுதலுக்குரிய கவிதைகள்
தை வலைப்பதிவிலும் வெளிவரும்.
அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும்
கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்..


மிக்க தோழமையோடு
இசாக்

Wednesday, November 12, 2008

ஞாபகத்தின் மழைத்துளிகள் - ஆ.முத்துராமலிங்கம்

முன்பு மழை பெய்தது…

வாசல் தொட்டு ஓடும்
மழை நீரில் காகிதக் கப்பல்கள்
விட்டோம் ஏரியில் மிதந்தது

அம்மா திட்ட திட்ட
முற்றத்தில் தேங்கிய மழைநீரில்
நீச்சலடித்தோம்

அவித்த
வேர்கடலை வாசத்துடன்
கருப்பட்டிகாபி ருசித்து
மழை ரசித்தோம்

மழைத்துளி விழுந்தெழும்
பச்சமண் வாசனை...
இன்னமும் மனதுக்குள் படிந்திருக்கின்றது.


இன்றும் மழை பெய்கின்றது...

காலமாற்றத்தில் ஏரிகளெல்லாம்
சேரிகளாகிவிட்டன
தெருக்களெ தற்காலிக
ஏரிகள்!

குப்பைகள் கப்பல்களானபின்
நாம் விட்ட காகிதக் கப்பல்கள்
ஞாபகக்கின்ற்றில் ஆழத்தில்
தரைதட்டி கவிழ்ந்து கிடக்கின்றன

அபாய பகுதிகளைத் தாண்டி
வேர்கடலை வாங்க
கடைக்கு போக முடியவில்லை!


அன்று மழை பெய்தது
தாய் பறவையின் வருகையுனர்ந்து
வாய்பிளந்து குதூகளிக்கும் குஞ்சுகளைப் போல்
மழையின் முன் குழந்தைகளானோம்

இன்றும் மழை பெய்கின்றது
வெட்கமில்லாமல் சன்னலை சாத்திவிட்டு
வீட்டின் உள் அறையில் படுக்கையிலமர்ந்து
கனிணியில் தேடுகின்றோம் மழைக்காலங்களில்
பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று!

Wednesday, November 05, 2008

ஆ.முத்துராமலிங்கம் கவிதைகள்.

http://www.thamizmanam.com/
பெய்த மழையின்
அளவை சொன்னது ஒழுகும்
ஏழை குடிசையில் நிரம்பிய
பாத்திரம்.!

புதிதாய்...
இன்னொரு மரத்தை
நட்டு வைக்க வேண்டாம்
இருக்கும் மரத்தையாவது
விட்டு வையுங்கள்
போதும்.....
இன்னொரு
தலைமுறையினரின்
தாகம் தீர்க்க!

கடற்கரையில்..
மணல் வீடுக் கட்டி விளையாடும்
குழந்தை போலவே - மனம்
காதலின் கரையில்..
கோட்டைகள் கட்டுகின்றன
பாவம் அழிக்கவே காத்திருக்கின்றன
அலைகள்!

ஒரு ரூபாய்க்கு அரிசி...
வாங்க முடியவில்லை
அழும் குழந்தையின்
பசியாற்ற
பால்... புட்டி... ரப்பர்!